வியர்க்குருவை உடனடியாக விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்...
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
கோடையில் வியர்க்குரு ஏற்படுவது மிகவும் பொதுவான பிரச்சனை. இதற்கு முக்கிய காரணம் வியர்வை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எப்படியெனில், கோடையில் சுரக்கும் அதிக்பபடியான வியர்வை துளிகள் நம் சரும துளைகளை அடைத்து, அழுக்குகளை சேர வைத்து வியர்க்குரு பிரச்சனையை உண்டு பண்ணும். அதிலும், பெரும்பாலானவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படும். இதனால் அரிப்பு, எரிச்சல் மட்டுமின்றி சில சமயங்களில் சிறு காயங்களும் ஏற்படக்கூடும். எனவே, கோடைகாலத்தில் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவும் எளிய வீட்டு வைத்தி முறைகளைத் தான் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…
வெள்ளரிக்காய்
கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் அதிகமாக கிடைக்கக்கூடிய ஒன்று. எனவே, உங்கள் வீட்டில் வெள்ளரிக்காய் இருந்தால் அதை மெல்லிய துண்டுகளாக வெட்டி சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அவை நன்கு குளிர்ச்சியடைந்ததும் எடுத்து வியர்க்குரு உள்ள இடத்தில் வைத்து மெதுவாக தேய்க்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.
முல்தானி மெட்டி
முல்தானி மெட்டி கோடை கால சருமப்பிரச்சனைகளைச் சரி செய்வதில் மிகவும் உதவக்கூடியது. எனவே, இதைப் பயன்படுத்துவதால் வியர்க்குரு பிரச்சனையால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் தணியும். இதற்கு முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும். இப்போது அந்த பேஸ்ட்டை வியர்க்குரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். பின்னர், அது நன்கு காய்ந்ததும் தண்ணீரில் கழுவிடவும். இப்படி செய்தால் உடனடி பலனைப் பெற்றிடலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழையானது நமது சருமத்திற்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. அதனால், இது வியர்க்குருவால் உண்டாகும் எரிச்சலை தணித்திடும். எனவே, தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு வியர்க்குரு உள்ள இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் எரிச்சல், அரிப்பு நீங்கி நிம்மதியாக உறங்கலாம். வேண்டுமென்றால் ஃப்ரிட்ஜில் வைத்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் கூட நன்றாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் காரணமாக தான் வியர்க்குரு போன்ற சரும பிரச்சனைகளை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் உதவுவதாக கருதப்படுகிறது. அதற்கு, தினமும் இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை வியர்க்குரு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். சில நாட்களிலேயே வியர்க்குரு மறைந்திடும்.
கடலை மாவு
கடலை மாவைப் பயன்படுத்தி வியர்க்குருவை சுலபமாக போக்கலாம். அதற்கு கடலை மாவை குளிர்ந்த நீருடன் சேர்த்து நன்கு கலந்து பேஸ்டாக தயாரித்து கொள்ளவும். இப்போது அந்த பேஸ்ட்டை வியர்க்குரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். அது நன்கு உலர்ந்த பின் அதை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவிடவும்.
ஐஸ்கட்டி
வியர்க்குரு பிரச்சனை அதிகமாக உள்ளவர்கள், அதன் எரிச்சனை உடனடியாக குறைக்க ஐஸ்கட்டிகளைப் பயன்படுத்தலாம். அதற்கு, 2-3 ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் வைத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவினால் உடனடி பலன் கிடைக்கும்.