பன்னீர் பட்டர் மசாலா!!!
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
பன்னீர் பட்டர் மசாலா செய்வது அவ்வளவு கடினமான வேலையெல்லாம் ஒன்றும் கிடையாது. கடைகளில் வாங்கி சாப்பிடும் அதே பன்னீர் பட்டர் மசாலாவை வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்தலாம். இது சப்பாத்தி, பூரி, நாண், தோசை போன்றவற்றிற்கு அட்டகாசமான சைடு டிஷ் ஆக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள முறையில் ஒரு முறை பன்னீர் பட்டர் மசாலா செய்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படும் வகையில் சுவை அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 1 பாக்கெட் (சிறு சிறு துண்டுகளாக்கப்பட்டது)
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 5 (நறுக்கிய)
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறு துண்டு
முந்திரி - 6
வெண்ணெய் - 50 கிராம்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் அல்லது காரத்திற்கு ஏற்ப
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
கசூரி மேத்தி (அ) காய்ந்த வெந்தய இலைகள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
பட்டை - 1
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 3
செய்முறை
*முதலில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி போல் ஆகும் வரை வதக்கவும்.
*பின்னர், அத்துடன் நறுக்கிய தக்காளி சிறிது உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். உடன், இஞ்சி, பூண்டு மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்.
*வதக்கிய கலவையை நன்கு ஆற வைத்து மிக்ஸர் ஜாரில் சேர்த்து மைய அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். (நன்கு ஆறிய பின்பு அரைக்கவும், இல்லையெனில், தெறிக்கும்)
*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாதி வெண்ணெய் சேர்த்து, அது உருகியதும் பட்டை, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
*அத்துடன், அரைத்து எடுத்து வைத்துள்ள மசாலாயை சேர்த்து அரை டம்ளர் நீர் ஊற்றி அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும். இல்லையென்றால், கொதிக்கும் போது மேலே தெறிக்கும்.
*இப்போது மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, கடாயை மூடி வைத்து கொதிக்க விடவும்.
*மிளகாய் தூளின் பச்சை வாசனை போன பிறகு சுவை பார்த்து சரிசெய்த பின்னர், பன்னீரை சேர்க்கவும். பன்னீரை 5 நிமிடங்கள் வேக விட்டால் போதுமானது.
*பின்னர், கசூரி மேத்தி இலைகளை கைகளால் நசுக்கி பன்னீர் மசாலா மீது துவி விட்டு கிளறவும்.
*அடுப்பை அணைப்பதற்கு முன்பாக மீதமிருக்கும் வெண்ணெயை சேர்த்திடவும்.
குறிப்பு
*பன்னீர் பட்டர் மசாலாவிற்கு எவ்வளவு வெண்ணெய் சேர்க்கிறோமோ அவ்வளவு சுவை அற்புதமாக இருக்கும்.
*பன்னீர் பட்டர் மசாலாவிற்கு வெங்காயத்தை விட தக்காளி அதிகமாக தான் போட வேண்டும். அப்போது தான் அதன் சுவை கிடைக்கும்.
*நீங்கள் விருப்பப்பட்டால் இத்துடன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கொள்ளலாம். அதை, வெண்ணெய் சேர்ப்பதற்கு முன்பு ப்ரஷ் க்ரீம் சேர்த்து கிளறிவிட்டு பின் வெண்ணெய் சேர்க்கவும்.
*மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் வெண்ணெய் இல்லை என்றாலோ, கசூரி மேத்தி இல்லை என்றாலோ பரவாயில்லை. அவற்றை தவிர்த்து மீதமுள்ள பொருட்களை வைத்து செய்தாலே சுவையாக தான் இருக்கும்.