பழமுதிர்சோலை முருகன் திருக்கோயில்...
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
பழமுதிர்சோலை முருகன் திருக்கோயில் மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலைக்கு மேல் இந்த கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார். “சோலைமலை” என்ற பெயரும் இதற்கு உண்டு.

அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள். ஔவையாரின் அகங்காரத்தை போக்குவதற்காக முருகன் சிறுவனாய் வந்து சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று திருவிளையாடலை அரங்கேற்றினார்.

இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம்மால் பார்க்க முடிகிறது. பழமுதிர்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.