கோடைகாலம் வந்தாச்சு, ஐஸ்கிரீம் சாப்பிட ஆரம்பிச்சுடீங்களா? அப்ப முதல்ல இத படிங்க...
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
கோடை காலம் வந்ததுமே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. கோடைகால வெயியில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்ச்சியான பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகமாக சாப்பிட தொடங்கியிருப்பர். கோடையில் வெயிலுக்கு குளிர்ச்சியான ஐஸ்கிரீம் மிகவும் சுவையாக தான் இருக்கும். ஆனால், நாம் சாப்பிடும் ஐஸ்கிரீம் நம் உடலுக்கு நல்லது தானா என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், ஐஸ்கிரீமை எப்போதாவது சாப்பிடுவது சரி தான். ஆனால், நாளொன்றிற்கு 3 முதல் 4 ஐஸ்க்ரீம் சாப்பிடுவது எல்லாம் பெரும் கேடு விளைவிக்கும். அதிக அளவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல்நலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? ஐஸ்கிரீமில் பால், சாக்லேட், பல வகையான உலர் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை நம் உடலுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடும். இருப்பினும், அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது. சரி இப்போது ஐஸ்கிரீம் சாப்பிடுவதன் நன்மை தீமைகளை சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்…
ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
எடையை அதிகரிக்கும்
ஒரு அறிக்கையின்படி, ஐஸ்கிரீமில் சர்க்கரை, கலோரிகள், கொழுப்புகள் அதிக அளவில் இருப்பதால், அவை ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதை அதிகமாக சாப்பிடுவது உடல் பருமன், இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்க செய்யுமாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று ஐஸ்கிரீம்கள் சாப்பிட்டால், 1000 கலோரிகளுக்கு மேல் உடலுக்குச் செல்கிறது. இது உடல் எடை அதிகரிக்க போதுமான அளவு. எனவே, நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் ஐஸ்கிரீம் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்தே ஆக வேண்டும்.
தொப்பை அதிகரிக்கும்
ஐஸ்கிரீமில் கார்போஹைட்ரேட்டுகள் மிக அதிகமாக உள்ளது. இது மாதிரியான, அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதன் மூலம், வயிற்று பகுதியில் கொழுப்பு அதிகமாக சேரத் தொடங்கும்.
இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்
ஐஸ்கிரீமில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. மேலும், ஐஸ்கிரீம் சாப்பிடுவது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும். அத்தகைய சூழ்நிலையில், ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம், அதிக எடை இருந்தால், தினமும் அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். உண்மையில், ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீமில் 10 கிராம் வரை தமனி அடைக்ககும் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் 28 கிராம் அளவு சர்க்கரை உள்ளது.
மூளைக்கு தீங்கு விளைவிக்கும்
ஒரு ஆராய்ச்சியின் படி, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவு அறிவாற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் சக்தியைக் குறைத்திடுமாம். ஆம், ஒரு கப் ஐஸ்கிரீமிற்கு மேல் சாப்பிட்டாலே இது நடக்கக்கூடுமாம்.
சர்க்கரை அளவு அதிகரிக்கும்
ஐஸ்கிரீமில் நிறைய சர்க்கரை உள்ளது. அதை உட்கொண்ட பிறகு உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். எனவே, நீரிழிவு நோயாளிகள் ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
சோம்பலை அதிகரிக்கும்
ஐஸ்கிரீமில் கொழுப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இது ஜீரணிக்க அதிக நேரம் எடுத்து கொள்ளும். இப்படிப்பட்ட நிலையில், சீக்கிரம் ஜீரணமாகாத காரணத்தால் இரவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு தூங்கினால் நல்ல தூக்கம் வராது. மேலும், உணவு உட்கொண்டவுடன் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது என்பதற்கும் இதுவே காரணமாகும்.
ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- கோடை காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது புத்துணர்ச்சி, குளிர்ச்சியான உணர்வைத் தரும்.
- சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால், உடலுக்கு சத்து கிடைக்கிறது.
- ஐஸ்கிரீமில் பால், உலர் பழங்கள், செர்ரிகளும் உள்ளன. அவை உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களைத் தரும்.
- ஐஸ்கிரீமில் பால் இருப்பதால், அதை சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும்.
- ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் மனதுக்கு மகிழ்ச்சி, மன அழுத்தம் நீங்கும்.
- அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதன் மூலம், எரிச்சல் உணர்வு, வலியில் இருந்து தற்காலிக நிவாரணம் பெறலாம்.